தெருநாய் கடித்தால் சோறு போட்டவர்களுக்கு அபராதம் - நீதிமன்ற அதிரடிக்கு காரணம் இதுதான்!1242484200


தெருநாய் கடித்தால் சோறு போட்டவர்களுக்கு அபராதம் - நீதிமன்ற அதிரடிக்கு காரணம் இதுதான்!


இரவு பணி முடித்து வரும் ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி, திருடனுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ.. தெரு நாய்களுக்கு கட்டாயம் பயப்படுகின்றனர். பணி முடித்து வருவோரை தெரு நாய்கள் கூட்டமாக துரத்துவது பல இடங்களில் வழக்கமாகிவிட்டது. பக்கத்துக்கு தெருவுக்கு நடந்து செல்ல நினைப்பவர்களும் நாய்க்கு பயந்து வாகனத்தில் செல்கின்றனர். வாகனத்தை நாய்கள் துரத்தி செல்வதால், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி, வாகனங்களில் இருந்து விழுந்து அடிபடுகின்றனர். இப்படி நாய் தொல்லையால் பல தரப்பினரும் பயத்திலேயே சாலைகளில் பயணம் செய்கின்றனர்.. அந்த அளவுக்கு தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

தமிழகத்தில் தான் இந்த நிலை என்றாலும் கேரளாவிலும் தெருநாய்களின் தொல்லை இப்படித்தான் உள்ளது.

கேரளா முழுவதும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதுகுறித்த உடனடி செயல் திட்டத்தை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேச உள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநிலத்தில் 152 தொகுதிகளில் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ஏபிசி) மையங்கள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட எம்.பி.ராஜேஷ், ``பொதுமக்களின் ஒத்துழைப்புடன் விரைவில் தீர்வு காணப்படும்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து விட்டதால் அதை கட்டுப்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வி.கே.பிஜூ என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

மனுவில் அவர் குறிப்பிட்டதாவது, ``கடந்த 2015ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கில், உள்ளாட்சி சட்டங்கள்படி தெருநாய்கள் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தெரு நாய்களால் ஆபத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது, ‘கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரளாவில் நாய்கடியால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உச்சகட்ட வேதனையாக 12 வயது சிறுவன் நாய்கடியால் இறந்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் அரை கிணறு பகுதியில் 12 வயது சிறுவன் நூராஸ், வீட்டிற்கு வெளியே சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த போது, திடீரென வேகமாக ஓடி வந்த தெரு நாய் ஒன்று, சிறுவனை கடித்து குதறியது. சிறுவன் தப்பித்து செல்ல முயன்றும் விடாமல் தெரு நாய் தொடர்ந்து கடித்த நிலையில், இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.

கேரளா மாநில அரசின் தகவல் படி 2022ல் இதுவரை கேரளாவில் 21 பேர் வெறிநாய்க்கடியால் இறந்துள்ளனர். அவர்களில், பாதிக்கப்பட்ட ஐந்து பேர், அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி ரேபிஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர். கேரளாவில் வெறிநாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசிகள் பலனளிக்க வில்லை என்ற குற்றச்சாட்டும், கடும் விமர்சனங்களும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் ``ரேபிஸ் தடுப்பூசியின் தரத்தை பரிசோதிக்க வேண்டும்” என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கேரளா சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:

"பொதுவாக தெரு நாய்களுக்கு உணவு தருபவர்களால் அவற்றை எளிதாக அடையாளம் காண முடியும். எனவே, அந்த தெரு நாய்கள் யாரையாவது கடித்தால், அதற்கு உணவு தருபவர்களே பொறுப்பாவார்கள். அவர்கள்தான் தெருநாய்க்கு தடுப்பூசி செலுத்தும் செலவையும் ஏற்க வேண்டும். அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.

நாய்களுக்கு உணவு கிடைக்காவிட்டாலோ அல்லது ஏதாவது தொற்று பாதிப்பு ஏற்பட்டாலோ அவை கொடூரமாக மாறி விடுகின்றன. எனவே, தெருநாய்கள் குறித்த கவலைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். தெருநாய்களுக்கு உணவு வைப்பவர்கள்தான், பொதுமக்களை அந்த நாய்கள் கடிக்காமல் தடுக்க வேண்டும். அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

ரேபிஸ் வைரஸ் போன்ற தொற்றால் பாதிக்கப்பட்ட தெருநாய்களைக் கண்டறிந்து கால்நடை பராமரிப்புதுறை தனியாக பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கில் விலங்குகள் நல வாரியத்தினர், அவர்கள் தரப்பு வாதங்களை முன்வைத்த பின் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். என நீதிபதிகள் உத்தரவிட்டார், மேலும் வழக்கை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் 1.5 கோடி நாய்கடி வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது.

Comments

Popular posts from this blog